காமத்தைப் பாடும் மானிடர் இடையே
காதலைப் பாடுகிறேன்: ஒரு
ஜாமத்தில் நானும் பாரதியின் மொழி
சார்ந்து பாடுகிறேன்!
’காதல்;காதல்;காதல்;காதல் போயிற்
சாதல்;சாதல்;சாதல்’ என்று,
தீதறுங் காதலைச் சொன்னவன் பாரதி
தீட்டிய கவிதையைக் கேட்டவர்க்கே;
என்னருங் காதலின் மேன்மை விளங்கிடும்
இங்கதன் உண்மையைச் சொல்லுகிறேன்;
என்மனம் ஈர்த்தவள் எண்ணத்தை வார்த்தவள்
இருந்த விதம் அதைச் சொல்லுகிறேன்:
(வேறு)
கொத்தும் மலர்ச் செண்டு
கூந்தல் அலை பாய
கொவ்வை இதழ் ஓரம்
கூட்டும் நகை ஆரம்
குறிப்பான கதைகள் கூற
புத்தம் புது நிலவு
போன்ற முகத்தில் இரு
பொய்வண்டு மேவும் விழியாள்;
பொதிகை மலைச் சாரல்
புகுந்த இளங் காற்றை
பொய்யாக்கி நகரும் இடையாள்
காமம் அரும்பாத காதற் கரும்பாக
காமன் கணை தொடுத்த தேனோ?;ஒரு
ஜாமம் முழுதாக பாவம், இவன்பாடு
ஜனனம் இதற்காகத் தானோ?
கொள்ளை இடுகின்ற
கள்ளப் பார்வை தனை
மெள்ள விரிக்கின்ற பாவை;
கொஞ்சும் மொழி கூட்டி
கொள்ளைத் தமிழ் காட்டி
நெஞ்சம் புகுந்தசீ மாட்டி;
பள்ளம் மேடுகளைப்
பார்த்து நடந்தவனின்
உள்ளம் மெழுகாகும் வண்ணம்
பாச வலை வீச்சில்
பண்பு மொழிப் பேச்சில்
பற்றிக் கொண்டதவள் எண்ணம்!
காமம் அரும்பாத காதற் கரும்பாக
காமன் கணை தொடுத்த தேனோ?;ஒரு
ஜாமம் முழுதாக பாவம், இவன்பாடு
ஜனனம் இதற்காகத் தானோ?
காதல் எதுவென்று
காணும் அறிவின்றிக்
காமம் வழிகின்ற பருவம்;
கடந்து முடிந்தவனின்
கனிந்த மனம் புகுந்து
கவிதை படிக்கின்ற வித்தை;
ஓதும் பைங் கிளியின்
ஓசை கேட்ட மனம்
உணர்விலின்று ஒரு கர்வம்; அது
உலக மானுடர் தம்
உண்மைக் காதல் நிலை
உரைத்த பாரதியி னாலே.!
(வேறு)
”காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம்;
கலவியினால் காதலுக்கு இன்பம் உண்டாம்;
ஆதலினால் மானுடரே காதல் செய்வீர்’” என
அவன் மொழியைப் படித்ததனால் காதலுற்றேன்;
கண் விழித்தேன்;பாரதியின் கனவுரைத்தேன்
கருத்திடையே புகுந்தவளின் அழகுரைத்தேன்;
மண் பிறந்த பெருமையஎலாம் காதலினால்
மலர்கின்ற மாண்பதனைப் பொருள் உரைத்தேன்!
காதலுடன்,
கிருஷ்ணன் பாலா
20.08.2011 /01:00 am