Friday, January 11, 2013

எக்காலம்?


















வாழ்க்கைஎனும் நீள்பாதை
வார்த்திருக்கும்  காலடிகள்
ஊழ்வினையின் உறுத்தலெனெ
உணர்ந்திருப்ப தெக்காலம்?

பின்னாள் விளைவுகளைப்
பிழையற்ற வாழ்வாக்க
முன்னாள் அறிவோடு
மூழ்குவது எக்காலம்?

செய்யாத செயல்களுக்குச்
சிறிதளவும் உண்மையின்றிப்
பொய்யாய்ப் புகழ்வதைநாம்
புறக்கணிப்ப தெக்காலம்?

கல்லாத மானிடர்பால்
காட்டுகின்ற அக்கறையில்
இல்லாத பொருளுரைக்கும்
இலக்கொழிப்ப தெக்காலம்?

பொய்யை, புனைசுருட்டை
புளுகிஒரு பொய்க் கூட்டம்
கையொலிக்கக் காண்பதிலே
கையெடுப்ப தெக்காலம்?

நீதிநெறி முறைகள்
நில்லாத சிந்தனையை
ஓதி மகிழ்வோரை
ஒதுக்குவது எக்காலம்?

சாதிக் கண்ணோட்டம்
சண்டாளர் சகவாசம்
தீதென்று சொல்லி அதை
தீ வைப்பதெக் காலம்?

போதிக்கும் பொய்யரெலாம்
புறவேஷ தாரி எனும்
சேதிசொல்லிநாற்றிசையும்
சிந்திப்ப தெக்காலம்?

தோல்,சதையில் மயங்கித்
துவளுகின்ற பேய்மனதைக்
காலால் உதைத் திங்கு
கட்டிவைப்ப தெக்காலம்?

வீட்டுக்குள் இருந்தாலும்
வெளிஉலகில் மனம்திரியும்
கேட்டுக்குள் வீழ்வோரைக்
கேடறுப்ப தெக்காலம்?

இறக்காமல் பிறக்கின்ற
எண்ணங்களை வளப்படுத்தி
மறக்காமல் வாழுகின்ற
மனம்பெறுவ தெக்காலம்?

வீட்டு நினைவுக்குள்
வீழ்ந்தாலும் நாம்அதனை
நாட்டு நலன் ஆக்கி
நாடுவது எக்காலம்?

வையம் அழிக்கின்ற
வன்செயல்கள் புரிந்திங்கு
தெய்வம் தொழுவோரைத்
திருடரென்ப தெக்காலம்?

நீதிசெயும் ஆசனத்தில்
நிமிர்ந்திருக்கும் நேர்மையின்றிச்
சாதிக்கும் சபை ஒழித்துச்
சாற்றுவது எக்காலம்?

ஓட்டுக்கள் வாங்குதற்கு
ஊழல்பணம் நீட்டும்
நோட்டுப் பேய்களைநாம்
நோகடிப்ப தெக்காலம்?

இவண்-
கிருஷ்ணன்பாலா
11.1.2013