இனித்தது சில காலம் - பின்
துன்பத்தில் ஆழ்ந்து தொலைத்ததை எண்ணித்
துடித்தது சில காலம்……
நன்மையைத் தீமையைப் பிரித்தறியாமல்
நடந்தது சில காலம்-அதன்
பின்னணியில் ஓர் மடமையை உணர்ந்து
பிழைத்தது சில காலம்…
விரும்பியதெல்லாம் வெற்றிகள் ஆகிட
விளைந்து சில காலம்-அவை
அரும்பிய கனவெனத் தெளிந்தபின் மனது
அவிந்தது சிலகாலம்!
அழகிய பெண்கள் பழகிய விதத்தில்
அலைந்தது சில காலம்-அது
அழுகிடும் பொருளாய் ஆன பின்னாலே
அழுதது சில காலம்
கரும்பினித்ததுபோல் கவிதைகள் சுவைத்துக்
கனிந்தது சில காலம்-ஒரு
இரும்பும் துருவாய் ஆவதைப் பார்த்து
இளைத்தது சில காலம்!
செழுமனம் படைத்த சான்றோர் நிழலில்
சேர்ந்தது சில காலம்-பயன்
முழுதென வரும்முன் ஊழ்வினை தடுத்து
முறிந்தது சில காலம்!
இழிநிலை கொண்டோர் உறவினில் இரங்கி
இணைந்தது சில காலம்-வீண்
பழிகளில் சூழ்ந்து வழிதெரியாமல்
பதைத்தது சில காலம்!
நிரம்பிய அறத்தில் இருப்பதை இரைத்து
நிமிர்ந்தது சில காலம்-புகழ்
வரம்பினில் வாழ்க்கைச் சுமைகளை ஏற்று
வளைந்தது சில காலம்!
தாய்போல் பேயரைத் தாங்கித் திரிந்து
தாழ்ந்தது சில காலம்-தினம்
ஓய்வில்லாமல் உழைத்துடல் இளைத்து
ஓய்ந்தது சில காலம்!
கருமே கங்கள் கலைவது போல்துயர்
கலைந்தது சில காலம்-அட!
நிரந்தரம் என்று நம்பிய சுகமும்
நிலைத்தது சில காலம்
நிகழ்வதும் மறைவதும் சிருஷ்டியின் நிஜமாய்
நிலைப்பது நிகழ்காலம்-இதை
அகழ்ந்து ணராமல் சுகங்களைத் தேடி
அலைவது அலங் கோலம்!
சென்றவை யாவும் செலவினம் ஆக்கி
சிந்தையைச் செதுக்கு கின்றேன் - அதில்
நின்றவை நினைவின் நிஜமென வடித்து
நிம்மதி ஒதுக்கு கின்றேன்!
இன்றதில் வென்றேன்;நேற்றதில் தோற்றேன்;
இரண்டும் எனதில்லை-நான்
நின்றதை எண்ணி எழுதுகின்றேன்;பல
நினைவுகள்....முடிவில்லை….
-கிருஷ்ணன் பாலா-