பொது உடமைப் பூங்காவில் புகுந்த புயல்;
பூந்தென்றல் போலிங்கு பொலிந்ததுண்டு;
புதுமைமிகும் எழுத்தாளும் புதுமைப்பித்தன்
போலவொரு வடிவத்தைக் கண்டதுண்டு;
பாரதியின் நேர்முகமாய் நின்றதுண்டு
பலகாலும் புகைபிடித்துக் கொண்டதுண்டு;
நேர்மைமிகும் நிஜமான சிந்தனையில்
நிலைத்திருந்த வடிவத்தைச் சொல்லுகின்றேன்!
நேர் இருந்து இவரோடு
கலந்து பேசி
நிறைவான நட்பை நான்
உணர்ந்ததுண்டு;
யார் இவர்க்கு ஒப்பாக முடியும்? என்று
எண்ணியெண்ணிப்
பெருமையுடன் நிமிர்ந்ததுண்டு!
கூர்மைதிகழ் எழுத்துக்கள் உருவாகும்
கொஞ்சுதமிழ்ப் பட்டறையின் கொள்கைக்காரன்;
சீர்படுத்தும் சமுதாயக் கதைகள் எல்லாம்
செம்மாந்த நடை மிடுக்கில் சொக்க வைத்தான்!
இவருக்கு நிகராக
எவரும் இங்கு
இதுவரையில்
பிறக்கவில்லை;பிறந்தால்கூட
இவர்போல எழுதுகின்ற
அறிவு கொண்டு
இருப்பாரோ,அறியோம்;
நாம் உண்மைதானே?
வரிப் புலிக்கு நிகராக வரித்துக் கொண்டு
வாய் திறக்கும் பூனையெலாம் புலிகள் ஆமோ?
கரிக்குதவாக் கட்டைஎலாம் காய்ந்து காய்ந்து
கடை விரித்த போதும் அவை விலை போகாதே?
எழுத்தாளன் என்கின்ற இலக்கணத்தின்
எழுத்தாளர் யார்? என்று தேடுகின்றேன்:
கொழுப்பெடுத்துப் பலரிங்கு எழுதுகின்றார்;
குறைமதியை நிறைமதிபோல் காட்டுகின்றார்!
எவருக்கென் ஜே.கே.வின் கர்வம் உண்டு?
எவர்இந்த உரைநடைக்கு
உயர்வு தந்தார்?
எவருக்கு ஜெயகாந்தன்
தோற்றம் உண்டு?
எவர் இவர்போல்
துணிவோடு நின்றதுண்டு?
ஜெயகாந்தன்
எழுத்துக்கள் இலக்கியத்தின்
செறிவான உரைநடைக்குச் சிகரம் என்றும் ;
நயம்மிக்க தமிழ் படைப்பின் மகுடம் என்றும்
நவிலாத வாசகர்கள் உலகில் உண்டோ?
வறுமைக்கு எழுதாமல் வாழ்க்கையதன்
வளமார்ந்த சிந்தனைக்கு எழுத்தை ஈந்து;
மறுமைக்கும் இம்மைக்கும் அழியாப் புகழை
மலைபோலக் குவித்திங்கு வாழ்ந்து சென்றான்!
எப்போதும் சிந்தனையில் செழித்த முகம்
சிங்கம் போல் ஏறுநடை பயிலும் நேர்த்தி;
தப்பாமல் மானுடத்தை வெல்லும் நோக்கம்;
தவறாத கர்வத்தில் தழைத்த தோற்றம்!
இப்போது நினைத்தாலும் ஜே.கே என்று
இறுமாப்பு விளைவிக்கும் எழுத்து வேந்தன்;
எப்போதும் இலக்கியத்தின் உச்சம் நின்று
இணையற்ற ஜெயகாந்தன் வாழுகின்றார்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
9.4.2015