Friday, February 17, 2012

உள்ளத்தில் உள்ளது கவிதை!

"நேர்மையோ டிருத்தல்;நாளும்
நேர்வழி நடத்தல்;புத்திக்
கூர்மையோ டுழைத்தல்; எங்கும்
பொய்ம்மையை எதிர்த்து நிற்றல்

இவை என்றன் கொள்கையாக
இறை எனைப் படைத்த தாலே;
அவை என்றன் கவிதை  என்று
அளிக்கின்றேன்;உணர்வ தாரோ?

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.2.2012

Tuesday, February 14, 2012

காதலை அறிவீர்!

’காதலோ காதல்’ என்று
கடைவிரித் திந்த நாளில்
ஓதுவா ரெல்லாம்; காதல்
உண்மையை அறிந்து; தூய
காதலைச் சொல்வ தில்லை;
களங்கமும் உணர்வ தில்லை:
ஆதலால் அவர்கள் இங்கு
அறியவே எழுது கின்றேன்:

ஆதிநாள் அவ்வை சொன்ன
அதன் பொருள்;இருபா லர்கள்
காதலில் ஒன்று பட்டுக்
காண்பதே இன்பம் ஆகும்!
காதலின் களவை, கற்பை
காமத்துப் பாலில் அய்யன்
ஓதிய பண்பைப் போன்று
உலகிடை யாரே காண்பர்?

சீதையைத் தமிழில் காட்டிச்
செதுக்கிய கம்பன் சொன்ன
காதலின் நுட்பம் எல்லாம்
காண்பதே தமிழ்ப் பண்பாடு!
மீதியை இளங்கோ,சாத்தன்
மென்மையாய் வடித்து இந்த
மேதினி தன்னில் காதல்
மேன்மையைச் சொன்னா ரென்பேன்!
  
காதலைக் குயில் பாட்டென்றும்
கண்ணம்மா மீதில் என்றும்
ஓதினான் பாரதி;பின்னர்
உயர்தனி எளிய நடையில்
போதையில் புலமை மிஞ்சப்
புகழ்ந்தவன் கண்ண தாசன்!
காதலை இவர்கள் வழியே
காண்கிலார் மூடர் என்பேன்!


பருவத்தில் வீழ்ந்து நட்புப்
பழகுவோர் காதல் எல்லாம்
அருகுபோல் கருகிப் போகும்;
அதன் வழி அன்பு சாகும்!
உருவமும் கெட்டு உண்மை
உள்ளமும் பட்டு,பகைமை
பெருகிடும் பாதை ஒன்றே
பெருந்துயர் சேர்வ தாகும்!

கண்டதும் காதல்;பருவக்
காமத்தில் மூழ்கி.நெஞ்சம்
கொண்டதே நட்பு;அறிவு
குறுகிட உணர்ச்சி பொங்க
பண்டைநாள் பெருமை சாக
பாழ்பட நின்று, இந்தப்
பெண்டுகள்,ஆண்கள் ஒன்றாய்ப்
பிணைவதில் காதல் இல்லை!
                       
ஒருவருக் கொருவர்;உள்ளம்
உருகிய வாறு பழகி;
பெரியவர்;பெற்றோர் ஏற்கப்
பிழையிலா நட்புக் கொண்டு
இருவுடல் ஓருயிர் ஆகி
இல்லறம் காணும்;வாழ்வைத்
தருவதே காதல் என்று
தமிழரின் பண்பு சொல்லும்! 

அஞ்சிலே அரும்பும் காதல்;
அன்னையின் மேன்மை கூறும்;
பிஞ்சிலே பழுக்கும் காதல்;
பிழைபட வைக்கும்;உண்மை!;
நெஞ்சிலே அரும்பித் தூய
நினைவிலே விளையும் காதல்
எஞ்சிடும் வாழ்நாள் வரைக்கும்
எச்சமாய் நின்று வாழும்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.2.2012