·
ஒரு முன் குறிப்பு!
ஒரு வாக்கியத்தின்
முற்றுப் புள்ளி
அந்த வாக்கியத்தை
முடித்து விட்டதாய்
யார் சொன்னது?
அது முடிவல்ல;
அடுத்த வாக்கியத்தின் ஆரம்பம்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
நீங்கள்
உண்மையை
அறிய வேண்டுமாயின்
இதோ-
என்னைப் பற்றிச் சொல்கிறேன்;
என்னை
அறிய வேண்டுமா?
அப்படியானால்
உங்களைப்
பற்றியே
சொல்கிறேன்!
·
தராசு!
என் எழுத்தைப்
பொன் எழுத்தாய்ப்
பொறித்து வைப்பேன்!
போற்றுவதும்
தூற்றுவதும்
உங்கள் தலை எழுத்து!
முதிர்ச்சி!
அனுபவங்களுக்காகக்
காத்திருந்தது அறிவு;
பிறகுதான் தெரிந்தது:
’காத்திருப்பதே,
நல்ல அனுபவம்’
என்பது.
அடையாளம்!
”யாரது...
‘தொழிலாளர் நலனுக்காக
உயிரைக் கொடுப்பேன்’
என்று
லட்சியக் குரல் கொடுப்பது,
யார் அது?”
வந்தது பதில்:
‘வருங் கால முதலாளி’
’தொழில் முன்னேற்றத்துக்காக
சிறு தொழில் செய்யாமல்
பெருந்தொழில் செய்வேன்’
என்று-
உன் கல்லூரி
இலக்கிய விழாவில் பேசி
கலக்கி விட்டாயாமே?
மகனே,
என்ன செய்யப் போகிறாய்?”
பீடித் தொழில் நடத்தும்
பெரிய அரசியல்வாதி,
தன் பிள்ளையை
இப்படித் தயவாய்க் கேட்டார்.
பாச மைந்தன்
’பளிச்’செனச சொன்னான்:
‘சுருட்டுத் தொழில்!’
ஆச்சர்யம்!
நேர்க் கோடு.
கேள்விக்
குறியானது!
ஓ…!
பதினாறு வயதுப்
பாவை!
·
கவிஞன்!
ஒரு
பெண்ணைப்
பார்த்துக்
கற்பனை செய்யும்
காமுகர்களுக்கு
நடுவே-
கற்பனையில்
பெண்ணைப்
படைக்கும்
நான்.
·
காதல் என்பது…..
உங்களை
சொர்க்கத்தின் வழியாக
நரகத்துக்கு அழைத்துச் செல்லும் வழி!
புரியவில்லையா?
EXit of the HEAVEN
ENtry to the HELL.
தாழிடப் படாத கதவு;
பையை விட்டு
நீட்டிக்
கொண்டிருக்கும் ‘பர்ஸ்’
உண்மையை
மறைக்கத்
தெரியாத உதடு;
பெண்ணின்
தோளை விட்டு
விலகியிருக்கும் முந்தானை;
இவை-
குற்றவாளிகளை
அழைக்கும்
அழைப்பிதழ்கள்!
·
லாபம்!
வாழ்க்கைக்
குளத்தில்
செல்வக் கற்களை
எறிந்ததில்
அனுபவ வளையங்கள்..
எத்தனை மகிழ்ச்சி?
ஓ….
நஷ்டம் என்பது.
அனுபவத்தின்
லாபம்!
·
ஞானம்!
என்னைத்
தெரிந்து கொள்வதற்காகச்
சிந்தித்தேன்…
விளைவு,
அதில்-
நான் மறைந்து போனேன்.
பிறகுதான்
தெரிந்தது:
சிந்தித்ததே
என்னைத் தெரிந்ததால்தான்!
ஆர்ப்பாட்ட
வாழ்க்கையை
அமைதியாகச்
சிந்தித்து
மனம்.
மெளனம் சப்தித்தது.
ஓ…..
நான் பேசுவதற்காக
வரவில்லை;
பேசப் படுவதற்காக!
·
’புள்ளி’ விவரம்!
உண்மையில்-
சிறு புள்ளி;
ஊருக்குப்
பெரும்புள்ளி;
உரசிப் பார்த்தால்-
‘கரும்புள்ளி’
·
’புள்ளி’ விஷயம்!
ஒரு சிறு புள்ளிதான் –
சிறந்த கோலங்களின்
தொடக்கமும்
ஆகலாம்;
அலங்கோலங்களின்
முடக்கமும் ஆகலாம்!
அது-
புள்ளிகளைப்
பயன்படுத்துகிற
புள்ளிகளைப்
பொறுத்தது!
·
முடிவல்ல ஆரம்பம்!
ஒரு வாக்கியத்தின்
முற்றுப் புள்ளி
அந்த வாக்கியத்தை
முடித்து விட்டதாய்
யார் சொன்னது?
அது முடிவல்ல;
அடுத்த வாக்கியத்தின் ஆரம்பம்!
·
எடை!
ஏந்தி கிடந்ததை
எடுத்து வைத்தேன்;
இருந்த பொருளும்
எங்கோ தொலைந்தது;
இருப்பதை
எடுத்து
அன்புடன்
ஈந்தேன்;
இரட்டிப்பாகத்
திரும்பி
வந்தது!
ஓ…
செல்வம் என்பது-
சேர்வதில்
அல்ல;
அது,
எப்படிச்
செலவிடப்படுகிறது
என்பதில்!
·
எழுத்து!
நண்பனே!
நான்
எழுதுவது-
என்னை அறிமுகம்
செய்வதற்கு
அல்ல;
உன்னை
நான் அறிவதற்கே!
·
பேனா!
ச்சே!
ஐந்து விரல்களால்
என்ன பயன்?
தின்னத்தானே
முடிகிறது.
இதோ-
இந்த ஒரு விரலே போதும்;
உலகம் தின்ன!
·
இப்படியும் ஓர் உயில்!
பிச்சைக்காரன் ஒருவன்
இப்படி
ஓர் உயிலை
ஊருக்கு எழுதி வைத்தான்;
”எழுதுங்கள்:
என் கல்லறை மீது;
இவன் –
சில்லறையில்லாமல் செத்தான்;
ஆனால் –
சில்லரையாகச் சாகவில்லை”
இவண்-
கிருஷ்ணன்பாலா
இந்தக் கொத்தில் உள்ள பல முத்துக்கள் 1984-களில் ’தமிழ் உலகம்’ என்ற இதழிலும்
மீதி 1988-ல் வெளியான எனது,’இந்த ராஜ பாட்டையில்….’
என்ற நூலிலும் பிரசுரம் பெற்றவை;
சில பிற்சேர்க்கைகள். -கிருஷ்ணன் பாலா .