Saturday, March 24, 2012

ஞானமே வா.


என்னை இந்த உலகிடையே
இட்டவன் யார் என்பதை
முன்அறிந்து சொல்பவர்யார்?கேட்கிறேன்-அதை
மொழியும்வரை முளைப்பதில்லை ஞானம்!

ஒத்தையடிப் பாதையில்
ஒற்றைமர நிழலிலே
’நத்தி நின்றால் போதும்’ என்று யாரும் - நின்று 
நம்புவதால் வருவதில்லை ஞானம்!

பத்தினியாய் இருப்பவள்தன்
பதியினோடு வாழ்ந்திடில்
எத்தனைதான் சுகம் இருந்த போதிலும் - அதில்
எட்டிவந்து சேர்வதில்லை ஞானம்!

வெட்டுப்பட்ட புண்ணிலும்
விம்மி நிற்கும் சதையிலும்
கட்டுப்பட்டுப் போகும் இந்தக் காயம் - அது
கசக்கும்வரை காண்பதில்லை ஞானம்!

கட்டளையை இட்டு உனைக்
கட்டிப் போடும் ஆசைகள்
சுட்ட பின்னர் தெரிந்திருக்கும் பாடம் - அதன்
சுவை மறந்தால் சுடுவதில்லை ஞானம்!

பட்டணத்து வாழ்க்கையில்
பட்டினத்தார் பார்வையில்
ஒட்டிக் கொண்டு இருப்பதில்லை யாரும் -அந்த
உறவுகளில் தெரிவதில்லை ஞானம்!

காதல் என்று காமத்தை
ஓதி நின்று பேசினால்
நீதி என்று ஆவதில்லை, பாரும்! - அந்த
நெஞ்சத்திலே நெகிழ்வதில்லை ஞானம்!

அப்பனோடு அம்மையை
அப்பி வைத்த காமத்தைத்
தப்பி வந்து பார்ப்பவர்க்கே தோணும் -அது
தழைக்கும்வரை முளைப்பதில்லை ஞானம்!
                                          
ஞானம் பெற்ற புத்தனும்
ஞானம் அற்ற பித்தனும்
ஞானியர்க்கு ஒன்றுதானே ஆகணும்? - இதை
அறிந்திடாமல் புரிவதில்லை ஞானம்! 

தேடும்,
கிருஷ்ணன்பாலா
24.3.2012

Thursday, March 22, 2012

மகா லட்சுமிக்கு வாழ்த்து!


தந்தை முத்துக்குமரன் - குழந்தை மகாலட்சுமி - தாய் ஷாலினி
புகைப் படம் : சரவணன்                         


கூடுகட்டி வாழ்ந்த வாழ்வு குலைந்தவிட்ட போதிலும்
கூடுகின்ற நட்பினோடு குறையில்லாமல் நடக்கிறேன்;
தேடிவந்த சொந்தம் நூறு;திசைகள்தோறும் இருப்பினும்,
தெய்வமனம் திகழும் அன்பைச் சிலரிடத்தில் காண்கிறேன்!

கேடுகெட்ட உறவினோடு கீர்த்தி குன்றி வாழ்வதைக்
கிழித்தெறிந்து போட்டுவிட்டுத் தெருவழியே நடந்தவன்;
நாடுகின்ற பாதை எங்கும் வேடமிட்ட விலங்குகள்;
நானறிந்து விட்டொழித்துத் தனி வழியில் கடந்தவன்!

குன்றுபோல உயர்ந்து நின்று கோபுரமாய் வாழ்வதைக்
கொன்றுவிட்டு குப்பை மேட்டில் ‘நன்று’ என்று வாழ்வதும்;
நன்றிகொன்று தின்றுயிர்த்து நாய்களையே வளர்ப்பதும்
நாட்டிலிங்கு கண்டு நானும் அனுபவித்துச் சொல்கிறேன்:

எவரிடத்தும் உறவு இன்றி;பகையும் இன்றி வாழ்வதை
இதயம் வைத்து என்வழியில் தனிமையோடு நடந்தவன்;
தவற விட்ட அன்பு,பாசம் அத்தனையும் ஒன்றெனத்
தாங்கி வந்து ஒட்டிக் கொண்ட தத்தை மகாலட்சுமி

முத்துக்குமரன்-ஷாலினிக்கு முகிழ்த்து.அறிவுச் செல்வமாய்
முன்னிருந்து எனது அன்பை ஆளுகின்றாள்;நெகிழ்கிறேன்!
வித்தையுள்ள பேச்சுரைத்து நெஞ்சைக் கொள்ளை கொள்பவள்;
விளைந்தஆண்டு நான்கில் வாழ்த்துக் கவிதைகூறி மகிழ்கிறேன்!

முத்துப்போல விளந்து நல்ல வைரமென்று வாழவும்
முன் எவர்க்கும் நின்றுதவி உலகை அன்பில் ஆளவும்;
சொத்து சுகம் அத்தனையும் வரவு கொண்டு காணவும்;
சொந்த பந்தம் யாவும் ’இவள் சொந்தம்’என்று கூறவும்

நீண்ட ஆயுள் நிறைந்த வாழ்வு;நிகரில்லாத கல்வியில்
நிமிர்ந்திருந்து நாட்டில் நல்ல புதல்வி என்று ஆகவும்
ஆண்டவனை வேண்டி இன்று அகம் நினைந்து வாழ்த்தினேன்;
அன்புமிக்க நண்பரெலாம் அவளை வாழ்த்த வேண்டினேன்!

வாழ்த்தும்-
கிருஷ்ணன்பாலா
21.3.2012