Thursday, January 26, 2012

வாழ்க,இந்தியக் குடியரசு!

















நண்பர்களே.
இந்தச் சிறுவன் இப்படிச் சொல்கிறான்:

இந்திய தேசியத்தை
விற்றுப் பிழைக்கும்
சீமான்கள் பட்டியல்
உலகத் தர வரிசையில்
முதலிடம் பெற்று வருதுன்னு
சொல்றாங்க...

இதெல்லாம் எனக்குத் தெரியாது...

அதுல...
நீங்கள் எல்லாம்
ரொம்ப ஆர்வத்தோட
சிந்தனை செஞ்சு வர்றது
மட்டும்
எனக்குத் தெரியும்!

ஆனா...
நாங்க இந்த நாளில்தான்
நம்ம தேசியக் கொடியை
விற்றுப் பிழைக்கிறோம்!

எங்க பக்கம்
கடைக் கண் பார்வையைக்
காட்டறவங்க எத்தனை பேர்?
இன்னிக்குப் பார்க்கப் போறேன்!”

26.1.2012

Sunday, January 15, 2012

பொங்குக பொங்கல்!














‘எல்லோரும் எல்லாமும் பெறுதல்’ என்ற
இலக்கணத்தை எடுத்துரைத்து;இந்த மண்ணில்
எல்லார்க்கும் உயிர்வாழ இறைவன் தந்த
ஈகைக்கு நன்றி சொலும் திருநாள் என்று
முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்த நாளாய்
முன்னேர்ப் பிடித்து,இந்தத் தரணி தன்னில்
தன்னேர் இல்லாத தமிழர் பண்பின்
தலைசிறந்த பண்டிகையாய்க் கண்டோம் நாமே!

மஞ்சளொடு வாழை,நெல்,கரும்பு என்று
மண்பானைப் பொங்கலிட்டு,உழவைப் போற்றி,
வஞ்சியரின் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள
வளைய வரும் வாலிபர்தம்வீரம் காட்ட
காளைகளை அடக்குகின்ற காளைகளாய்க்
காணுமொரு பொங்கலெனப் போற்றி,இந்த
நாளைநம் தலைமுறைகள்தோறும் கண்டு
நலமார்ந்த பண்டிகையாய்க் கொண்டோ மன்றோ?

எப்பெரிய பண்டிகையும் பொங்கல் முன்பு
எதிர் நிற்க முடியாது;உலகில் மூத்த
எப்பெரிய இனத்தாரும் தமிழர்க் கீடு
இல்லை;அதை உணர்வீர்,என் சுற்றத்தீரே!
எங்கிருந்த போதும்;இதை மறவாதீர்கள்;
எல்லோர்க்கும் எடுத்திதையே ஓதி நின்று
சங்கம்வளர்த்த தமிழ்ப் பண்பை உங்கள்
சந்ததியர் அறிந்துணரப் பொங்குவீரே!

வாழ்த்துக்களுடன்,
கிருஷ்ணன்பாலா
15.1.2012

Saturday, January 14, 2012

கவி’தை’ வாழ்த்து!








புதியதை,இனியதைத் தருவ ‘தை’
பூமியில் யாவரும் பெறுவதை
எதிர்வரும் நாள்முதல் காண்பதை
இறையதைவணங்கியே வாழ்த்திதை
‘தைஇதன் வருகையில்வரைகிறேன்;
தமிழரின் தனிப் பெரும் நாளிதை
தரணியில் போற்றுவோம் நண்பரே,
அமிழ்தினும் இனியநம் நட்பிலே
அனைவரும் மகிழ்வ ‘தை’ விரும்புவோம்!

நட்புடன்
கிருஷ்ணன்பாலா
14.1.2011

Tuesday, January 10, 2012

பிரமாணப் பத்திரம்!



அவ்வை சொன்னாள்; அகரம் எனக்கு;
அதுவே என்றன் வாழ்வின் கணக்கு;
கவ்விய மனது; கருதுவ தெல்லாம்
கவிதையை இங்கு விதைப்பதன்பொருட்டு!

வள்ளுவன்,மூலன்,வார்த்தைகள் எல்லாம்
வரிசை கட்டிய தமிழ் ஊற்றாக
வள்ளல் பெருமான் போன்றோர் வடிவில்
வந்த ஞானியர் திருக் கூற்றாக;

விதைத்துச் சென்ற வித்துக்கள் மண்ணில்
விளைந்தவை இங்கு அடர்வனம் ஆக;
புதையலைப் போலத் தேடி அவற்றைப்
புலவர்கள் அமுதப் பொங்கலிட்டனர்!

சித்தரும் முத்தரும் சிந்தித்த மொழியென
பித்தன்யானும் பேயாய் அலைந்து-
புத்தியில் அவற்றைப் புரிந்து கொண்டே
புதுப்புது விளைச்சலை அறுவடை செய்து-

நட்ட நிசியிலும் நடுநின்றுணர்ந்து
எட்டிப் பிடித்ததை இம்மொழியாக்கி,
எட்டுத்திசையிலும்கொட்டி முழங்கி
எவரும் உண்ணத் தகுந்தவை என்றே-

கம்பன்
 இளங்கோ,காட்டிய தமிழில்
கொம்பன்
 பாரதிகூறிய வாறே
நம்தொழில் எழுத்தென;நாட்டுக் கீந்து,
நல்லவை நவின்று சோரா திருப்பது!

நம்பிக்கை கொண்டு நாடிடுவோர்முன்
நாளும் இதையே நந்தா விளக்கென-
தெம்புடன் சொல்லித் தெளிவுடன் வாழ்வது:
தேசம் இதனைத் தெரிந்து கொள்க!

எதையும் இங்கு எதிர்கொண் டிருந்து
எதிலும் கலங்கா மலைபோல் நின்று
விதியை மாற்றும் விதியை எழுதி
விதைப்பது தான்என்
 எழுத்தின் இலக்கு!

இவண்-
கிருஷ்ணன்பாலா
10.1.2012

Sunday, January 1, 2012

புத்தாண்டு வாழ்த்து!


புத்தாண்டு பிறக்கின்ற இந்நன் னாளில்
புதியபல சிந்தனைகள் பிறக்க வேண்டி
இத்தினத்தில் நெஞ்சார வாழ்த்தி இங்கு
எழுதுகிறேன் நண்பர்களே;ஏற்பீராக!

அறிவார்ந்த இலக்கியமும்;ஆன்ம நேயம்
அணிகின்ற சிந்தனையும் கொண்டு இங்கு
செறிவார்ந்த இடமாக இம் முற்றத்தைச்
செய்கின்ற இடமாக்க எழுத வாரீர்!

முந்திவரும் செந்தமிழின் உணர்வை இங்கு
முறைப்படுத்தி எழுத்தாக்கி; படிப்பவர்தம்
சிந்தனையைத் தூண்டுகின்ற வண்ணம்;உங்கள்
சிறப்பான எண்ணங்களைச் செதுக்க வேண்டும்!

எந்தஒரு எழுத்துக்கும் அழுக்கு இன்றி
எழுதுங்கள்;எண்ணுங்கள்;நூலோர் சொன்ன
எந்தஒரு கருத்துக்கும் இழுக்கு இன்றி
எதிர்காலச் சந்ததிக்கு எழுத வேண்டும்!

பிணக்கின்றி எழுதுங்கள்; தமிழில் நன்கு
பிழையின்றி எழுதுங்கள்;நன்மை,என்றால்
கணக்கின்றி எழுதுங்கள்;காலம் எல்லாம்
கரைகடந்து நிற்கின்ற எழுத்தை இங்கே!

வருத்ததைச் சொன்னாலும்;வாழ்த்துச் சொல்லும்
வார்த்தைகள் என்றாலும் மொழியில் நல்ல
அர்த்தங்கள் பொதிகின்ற எழுத்துக் காட்டி
அறிவார்ந்த முற்றமெனச் செழிக்க வைப்பீர்!

எம்மதமும் நம் மதமாய்க் கொண்டு இங்கு
எவர்மனமும் புண்படாதெழுதி; இங்கு
உம் உணர்வைப் பண்போடு சொல்லி,நட்பின்
உயர்வொழுக்கம் வழுவாது நாட்டுவீரே!

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
1.1.2012