சந்தியிலே விட்டெறிந்து
‘பட்’டென்று போக உயிர் விழையும்;அந்தப்
பக்குவத்தில் ஞானம் ஒன்று விளையும்!
கட்டளையை இட்டு,எனைக்
கட்டிவிடும் ஆசைகளில்
கெட்டமனம் பாடம் ஒன்று தேடும்-அதைக்
கிண்டிவிட்டு ஞானம் வந்து சேரும்!
பெண்மயக்கம் என்பதொரு
புண்மயக்கம் என்றபின்னும்
கண்மயக்கம் கொண்டதிந்த நெஞ்சு-ஞானம்
கண்டபின்னர் அத்தனையும் நஞ்சு!
’பாவம் அறியா தவர்கள்;
பாரில் இல்லை’ என்றறிந்தும்
’தேவன்’ என்று மானிடனைப் பாடி-மனம்
தேடியது ஞானம் ஒரு கோடி!
’குற்றமிகும் மானிடந்தான்
கூட்டு’எனக் கண்டு கொண்டு
மற்றும் ஒரு தூயவனைத் தேடும்-அந்த
மாயைஒரு ஞான வடிவாகும்!
உன்னாலே நானும் இல்லை;
என்னாலே நீயும் இல்லை;
தன்னாலே நடக்கு திந்த உலகம்;அந்தத்
தத்துவத்தில்தான் ஞானம் உதயம்!
ஞானகுரு நாதன் அவன்
நல்லவற்றைச் சொன்னபின்னும்
போனதிந்தப் புத்தி கெட்டு, மானம்-அதில்
பொத்துக் கொண்டு வந்ததொரு ஞானம்!
ஞான நிலை என்பதெல்லாம்
நல்லபடி சேர்ந்ததென்று
நானறிந்த தில்லை;இங்கு பாரீர்-இதை
நம்ப மறுக்கின்ற வர்கள்,வாரீர்!
மானம் கெட்டுப் போன பின்பு;
மவுன நிலை ஆனபின்பு
ஞானம் வந்து சேரும் எனில்,பாவம்-இந்த
ஞாலத்துக்கு,எந்த வகை,லாபம்?
கிருஷ்ணன் பாலா
Guardian Manson Days @1988.
No comments:
Post a Comment