Saturday, June 30, 2012

காமமா? ஞானமா?



-------------------------------------------------------------------------------------------

காதல்வசப்படும் மனதில் ஞானத்தின் குழப்பமும்
ஞானத்தைத் தேடும் மனதில் காமத்தின் குறுக்கீடும்
கவிஞனைப் படுத்தியபாடு இருக்கிறதே,அது ஒரு
குழப்பமான ஆனந்த அவஸ்தைதான்.

அந்த அவஸ்தையின் வசத்திலிருந்து மீள்வதற்கும்
ஆள்வதற்கும் அது சற்குருநாதனைச் சரண் அடைந்து
பேசும் கவிதை ஓர் ஞானானந்த அனுபவம். இது 1984ல்.

கவிதையின் உயர் கோப்பும் மனச் சான்றின் மாறான
தீர்ப்பும் ஒருசேரப் பாய்ந்து வரும் இந்தப் பண்பாட்டுப்
படைப்பைச் சுவைப்பதற்கோர் ஞானம் வேண்டும்!

----------------------------------------------------------------------------------
அச்சமோர் புறத்திலும்
ஆசைஓர் தரத்திலும்
அனுதினம் நெஞ்சிலே புரள

அருளெலாம் மேவிடும்
அய்ய,நின் பாதமே
அடிமைஎன் நினைவிலே திரள

இச்சையால் நேரிடும்
இழிநிலை யாவையும்
எண்ணிஎன் உள்மனம் குமைய

இந்தநாள் உணர்ச்சியில்
இருதலைக் கொள்ளியுள்
எறும்பென என்நிலை அமைய

இம்சைகள்   மீளவும்
என்னையே ஆளவும்
இருந்திடும் நிலையினில் அழுதேன்!

என்னைநீ மீட்கவே
இன்பமே காக்கவே
இணையிலா உன்அடி தொழுதேன்!

சம்மதம் கொண்டுஎன்
சஞ்சலம் கொன்றிடும்
சத்திய ஜோதிநீ வருக:

சச்சிதா னந்தமாய்
சகலமும் அறிந்தஎன்
சற்குரு நாதனே அருள்க!

கயல்விழி மாதரை
கடலெனும் ஆசையில்
கவிமனம் தேடுதல் தவறா?

கச்சவிழ் கொங்கையில்
கண்களே வீழ்ந்தபின்
கவலைதா விடுவது சரியா?

இயல்படு மானுடர்
இலக்கணம் காமமாய்
இருப்பதே இல்லற வழக்கா?

ஈருடல் கலப்பது
இறைவனின் நினைப்பெனில்
என்நிலை அதில்விதி விலக்கா?

இன்றுநான் கேட்கிறேன்;
என்னையே பார்க்கிறேன்;
என்னுளே இருப்பது நீயே!

ஏதுநான் செய்கினும்
எப்பிழை ஆயினும்
என்னைநீ காத்திடு தாயே!

சன்னதி உன்னடி
சந்ததம் தேடினேன்;
சத்தியத் தெய்வம்நீ வருக!

சச்சிதா னந்தமாய்
சகலமும் அறிந்த என்
சற்குரு நாதனே அருள்க!

காதலில் ஞானமா?
காதலே ஞானமா?
கலங்கி நான் நிற்கிறேன் இன்று;

கவிஞனாய் இருப்பதால்;
காமமே ரசனையாய்க்
கவிதைகள் படைக்கிறேன் நன்று!

போதைநீ தருவதாய்
புரிகிறேன்;சரிகிறேன்;
புண்ணிய பாவம்யா ரென்று?

புத்தியே நீஎன
பூண்டஎன் நெஞ்சினில்
புண்படச் செய்தல்நன் றன்று!

யாவையும் நீஎன
ஏற்றவன் செயலினால்
                    என்னகோ பங்கள்நீ கொள்வாய்?

என்னைநீ ஏற்றது
           உண்மையே தானெனில்
                     என்பிழை யாவுமே கொல்வாய்!

சாவையும் வென்றஎன்
           சத்தியக் கவிதையில்
                     சார்ந்திடும் கருவென வருக!

சச்சிதா னந்தமாய்
          சகலமும் அறிந்தஎன்
                     சற்குரு நாதனே அருள்க!


------------------------------கிருஷ்ணன்பாலா---------------------------------------

----------------------------------------------KB/11.5.1984------------------------------------------------------------


No comments: