கோதையர் எல்லாம் கோபியர் ஆக;
கொஞ்சும் காளையர் கோபாலன் ஆக
ராதைகள் அவனிடம் ரகசியம் பேச
ராத்திரி பகலாய் துக்கம் தொலந்திட
குவலயம் இன்று கோகுலம்
ஆகட்டும்
கோபாலனருள் எங்கும் சூழட்டும்!
வீடுகள்தோறும் நந்த கோபனின்
விந்தை மிகுந்திடும் கால்கள் பதிந்திட;
கேடுகள் யாவும் தொலைக:கண்ணனின்
கீர்த்தி மிளிர்ந்திடும் மகிழ்வு பெருகிட
குவலயம் இன்று கோகுலம் ஆகட்டும்;
கோபாலனருள் எங்கும் சூழட்டும்!
மானிடர் இடையே மயக்கம் தெளிந்திட
மக்களும் இறையும் ஒன்றெனப் புரிந்திட
நான்,நீ என்னும் அகந்தை
மறைந்திட
நலம்சொலும் கீதையின் பெருமை விளங்கிட
குவலயம் இன்று கோகுலம்
ஆகட்டும்;
கோபாலனருள் எங்கும் சூழட்டும்!
இறைவன் ஒன்று;அவன்பல தோற்றம்
எண்ணற்ற உயிர்கள் அவனது மாற்றம்
உறையும் மதங்கள் நதிகளைப் போன்று:
ஓடிக் கலக்கும் கடல் அவன் தான்என-
குவலயம் இன்று கோகுலம்
ஆகட்டும்;
கோபாலனருள் எங்கும் சூழட்டும்!
கண்ணன் காட்டிய வழியினில் உலகைக்
காண்பதில் கர்வம் கொள்வோர் எல்லாம்
மண்ணில் அவன்வழி வந்தோர்;இன்று
மாண்பினைக் காட்டும் கிருஷ்ண ஜெயந்தியில்
குவலயம் இன்று கோகுலம்
ஆகட்டும்;
கோபாலனருள் எங்கும் சூழட்டும்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
கிருஷ்ணன்பாலா
9.8.2012
No comments:
Post a Comment