Friday, January 7, 2011

தெரு மந்திரம்






















திருமந்திரம் போற்றுமின்...!
தெளிவுடை மாந்தருக்குறும்பே ரின்பம்;
தெளிவுடை மாந்தருக்கொருநன் னூலது;
தெளிவுடை மூலர் மந்திரம் போற்றின்;
தெளிவுடை யதுபோல் பிறிதொன் றிலையே
(தெரு மந்திரம்:1  / 2.11.2010 /14:10 pm)

மெய்வழி!
உய்வழி யாதென உணர்வார் இல்லை;
செய்வழி நன்மை செல்வார் இல்லை;
பொய்வழி ஒன்றே புகும் வழி காண்பார்;
மெய்வழி செல்லார் மீளாதாரே!
(தெரு மந்திரம்:2 / 07.1.2011 / 11:58 AM)


கசடர்கள்!
கசப்புடை எழுத்தைப் பலபேர் நாடி
கசப்புடன் கசந்து கசப்பைப் பேசி
கசப்பின் கசடெனக் கழியா திருப்பர்;
கசப்பில் கலந்தே கரைந்திடு வாரே!
(தெரு மந்திரம்:3 / 2.11.2010 / 15:10 pm)


அல்லன நல்லது...
‘அல்லும் பகலும் நல்லன தேடி
அல்லன கழிய நில்’எனச் சொல்வோம்:
அல்லன போயின் நல்லன வெல்லாம்
அல்லும் பகலும் நிற்கும்தானே?
(தெரு மந்திரம்:4  / 15.09.2011 / 11:01 am)

அழையா விருந்தினன்!
அழையா விருந்தினன் அணுக்கத்திலிருந்தான்;
அழையா விருந்தினன் அவனை அறியார்;
அழையாப் போதிலும் அவன் இவன் உள்ளே
அழைக்கின்றான் தனை இவன் அறியானே!-
(தெரு மந்திரம்: 5 /15.09.2011 / 14:00 am)


குருவை நினைக்கின் 
எத்திக்கும் இன்பமுற இனி தருளும்
தித்திக்கும் குரு நாமம் செபித்து இங்கு
முத்திக்கும் முன்நிற்கும் பக்தி தன்னைப்
புத்திக்குள் வைப்போரை வணங்கி னேனே!
(தெருமந்திரம்:6 / 17.05.2012 / 09:00- am)



உணர்வு

உணரா மந்திரம் தெருவில் இருப்பன;

உணர்ந்தோர்க்கவைதாம் உருவம் தெரிவன:

உணராதிருந்து உணர்வோர் எல்லாம்
உணர்ந்தும் உணரா உணர்விருப்போரே!
(தெருமந்திரம்:7 17.5.2012 /09:41 am)





குரு வழி ஒரு மொழி
ஊர்சொல்லி நின்று உரைத்த பொருள் அன்று;

பேர்கொள்ள வேண்டிப் பிதற்றும் மொழி அன்று;
சீர்கொண்டு நின்றும் செபிக்கும் உரை அன்று:
நேர்கொண்ட நெஞ்சின் நிமலனருட் சொல்லே!
(தெரு மந்திரம்:8 / 31.5.2012)


மூடர் சபையின் முட்டாள்
முகம் பார்த்துப் பேசும் மூடர்கள்கள் நடுவிலிங்கு
முகம் காட்டி நிற்கின்ற முட்டாளாய் நானொருவன்,
முகவுரைத்தேன்;முன் நின்றேன்;என் அகத்தின்
முகம் காணாப் பேர்வழிகள் முனகு கின்றாரே!!
 ((தெரு மந்திரம்:9 / 31.5.2012)



1 comment:

Anonymous said...

very nice sir