Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்!

கரும்பு,மஞ்சள்,வாழை எங்கள்
கழனியெலாம் தங்குக;
தருமம் மிகும் தமிழர் மனம்
தரணியிலே பொங்குக!

அரும்புகின்ற நமது எண்ணம்
அவணியிதில் ஓங்கியே
அகதி ஆக வாழும் மக்கள்
ஆளும் மக்கள் ஆகுக!



புதிய பா‘தை’ படைத்து இந்தப்
புவியிலெங்கும் தமிழரின்
விதியை மாற்றும் வெற்றி சூழ
வேண்டுகின்றோம் பொங்கலே!

சிதைந்து போன நமது பண்பு
சிகரமாக எழுந்திட
உதயமாக வேண்டும்;இந்த
உலகம் போற்றும் பொங்கலே!

பொங்கல் எங்கள் சின்னமாகப்
பூமியெங்கும் பொங்குக!
மங்கலங்கள் பொங்குமாக
மகிழ்ச்சியோடு பொங்குக!

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்களுடன்
கிருஷ்ணன் பாலா
14.01.2011

No comments: