Wednesday, July 4, 2012

மரியே,அருள் புரியே !



தூயமரி உனைத் தொழுகின்றேன்; என்
துயரங் களில்விடு படுகின்றேன்;
தாயுன் கருணையை உணர்கின்றேன்; என்
தவறுகள் புரிந்திடத் தெளிகின்றேன்!

அம்மா,என்னைப் படைத்தவளே;இந்த
அவணியில் நலமாய் வளர்த்தவளே!
சும்மா எனைநீ படைப்பாயா?;ஒரு
சூக்குமம் இன்றி வளர்ப்பாயா?

பிறந்ததன் பயனைக் கேட்கின்றேன்;என்
பிறப்பினைச் சிறப்பாய் அளித்தருள்நீ:
சிறந்தன யாவும் இம்மண்ணில்;நான்
சிந்தித் திருந்திடக் கொடுத்தருள்நீ!

இங்கே என்னை அறிகின்றேன்;உன்
இணையடி யில்மனம் உயர்கின்றேன்
எங்கே பயணம் இருந்தாலும்;என்
இதயம் உனதடி வைக்கின்றேன்!

தாயே நீஎன் வழித்துணையே; என்
தமிழில் தோன்றிய நல்மரியே!
சேயாய்க் கேட்டென் ஆசைகளை;உன்
செவ்வடி வைத்தேன்; அருள்புரியே!

இவண்-
கிருஷ்ணன்பாலா

28.11.2000 அன்று வேளாங்கன்னித் திருத்தலம் சென்றிருந்த போது
அன்னை மரியாளின்  அருள் முகம் கண்டு என் மனம் சேவித்த கவிதை இது.

No comments: