Wednesday, July 18, 2012

இருபத்தைந்தாண்டு இல்லறம் வாழ்க!


ES மணி- அலமேலு
இருபத்தைந்தாண்டு இல்லறம் வாழ்க!
-----------------------------------------------------------

இனியதாம் இல் லறத்தின்
இருபத் தைந்தாண்டை இன்று
தனிச் சிறப்புடனே காணும்
தம்பியாம் மணியின் அன்பை
மனதிலே வைத்து; வாழ்த்தி
மகிழ்கிறேன்;கவிதையாலே!
இனிவரும் காலம்எல்லாம்
இறையருள் காக்க வாழ்க!

அலமேலு மங்கை யாளை
அன்புடன் கரம் பிடித்து
உலகிடை நீந்தி; நல்ல
உறவினை வளர்த்து நாளும்
கலகலப் பாக வாழ்ந்து
கனவுகள் கண்டே; நல்ல
நிலையினை அடைய வேண்டி
நெஞ்சிலே உறுதி கொண்டான்!

கற்றதோ கொஞ்சம் எனினும்
கருத்துடன் கற்றான்;அதையே
நற்றொழில் என்று கண்டு
நண்பர்கள் பெற்றான்;அந்தப்
பொற்றொழில் மணிக்கு நல்ல
புகைப் படத்தொழிலாய் அமைய;
மற்றவை இல்லை;எனினும்
மலைஎன நிமிர்ந்தான் அன்றோ?

என்னதான் செயினும் வாழ்வில்
எதிர்ப்புகள் வரினும்;கவலை
சின்னதோ பெரிதோ;எனினும்
சிந்தனை ஒன்றே ஆகி
நின்றது இறைவன் பக்தி;
நிறைவுடன் ஆண்டு தோறும்
சென்றது சபரிமலை தான்
சேர்வதே அவனருள் என்பான்!

இருபத்தைந்தாண்டுக் காலம்
இந்நிலை மாறாமல்தான்
குருவிபோல் பறந்து ஓடி
குடும்பத்தை வாழ வைத்து
வருகின்ற வாழ்வில் இன்று
வளமுடன் நலமும் சேர
குருவருள் வேண்டு கின்றேன்!
குவலயம் புகழ வாழ்க!

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
16.7.2012

No comments: