Friday, June 14, 2013

மனமே.நீ....

கம்பனைப் பாடி கொம்பனாகலாம்;கவி
காளமேகம்போல் கவிதை கொட்டலாம்;
நம்பிக்கைஊட்டும் வார்த்தைமலர்களில்
நாடே புகழும் பெயரை எட்டலாம்!

கண்ணதாசனின் காதல் கவிதையில்
கதை கதையாக  உவமை கூறலாம்;
எண்ணம் முழுவதும் அவன்பேர் வடித்து
இரவும் பகலும் வணக்கம் கூறலாம்!

அவ்வை,வள்ளுவன்,இளங்கோ,பாரதி
அடுக்கடுக்காக ஆயிரம் புலவரை
கவ்விடும் கருத்தில் வடித்து வைத்து
கருத்துப் பதிவுகள் வெளுத்து வாங்கலாம்!

அறிஞர் சபையில் ஆரா வாரங்கள்
அணங்குகள் இடையில் வரவேற்புரைகள்;
திறமை மிக்கதோர் தமிழுணர்வோடு
திசைகள் எட்டிலும் தேர்ந்து நிற்கலாம்!

கவிஞன்;புலவன்;அறிஞன் என்று
கணக்கில்லாமல் பேர் நீ, வாங்கினும்
புவியில் ’மனிதன்’ எனும் பெயர்  ஒன்றை
பூண மறந்தால் பொய் நீ,மனமே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.6.2013


(ஒரே மூச்சில் எழுதப்பட்ட  கவிதை இது)

1 comment:

Anonymous said...

விரல்களில் தஞ்சம் அடைந்து
கொஞ்சுகின்றாள் தமிழ் அன்னை!!
எளிய நடை, இனிய மொழி,
எங்கும் காண அழகு புலமை!
வணங்குகிறேன் இக்கவி வழி;
ஏன் பிறக்காது தன் எழுத்தே
தன கண எழுத்து என்பது!!!
எழுகிறதே இன்னும் சொல்ல
பற் பல எழுத்து
நக்கீரன் என்பதால் என்
நாவில் வரும் நாலெழுத்தும்
பொக்கிஷமாக புதைகிறதே!