Tuesday, November 5, 2013

வாழ்க,பாவலர், தமிழ்த்தொண்டு!

இராஜ.தியாகராஜன் அவர்களுக்கு


பாவலரே,
உங்கள் தமிழ்த்தொண்டுக்கு நான் அளிக்கும் பத்திரம் இது;
பத்திரம்.
அன்புடன் -
கிருஷ்ணன்பாலா





மேதினி ஆளும் தமிழ்த்தாய் ,பெற்ற
மேதைகள் இங்கு பலருண்டு;அவர்
சாதனை பலவும் போற்றிடத் தக்க
சங்கத் தமிழ்நூல் பலவுண்டு;அவை
யாதினும் உயர்ந்த படைப்புக் களாக
யாவரும் வியக்கும் கருவூலம்;இதில்
வேதனை,அவற்றை உணர்ந்தவர்கள்
வெளி தேசத்தார் என்ப தன்றோ?

மொழியை அறிந்து;அதனை ஆய்ந்து
மொழிவோர் இங்கு மிகக் குறைவு;
மொழியை உணர்ந்து,முன்னே நின்று
முயன்று பயில்வோர் அதில் சிலரே!
எழுதத்தெரிந்தோர் எங்கோ ,எதையோ
எதிர்பார்த் திருந்தே மொழிப் பண்பின்
வழியை விட்டே ஒதுங்கிச் சென்று,
வார்த்தை வணிகர் ஆன தென்னே?

தமிழ்த் தாய் போற்றி, தளரா திங்கு
தலை நிமிர்ந் திருக்கும் சிறு கூட்டம்
தமிழ் உலகத்தின் தேரோட்டத்தைத்
தாங்கிடும் அச்சின் நிலை போன்று!
அமிழ்தினும் இனிய தமிழின் சிறப்பை
அறிவோர் அறியத் தரும் வாழ்வு;
சுமைதான் எனினும் சுவையாய் அதனை
சொல்வோர் அவரே தமிழ்ச் செல்வர்!

செல்வர் என்ற செழும்புகழ் அவர்க்கே
சிறப்புறப் பொருந்தும்; அறிவோர் யார்?
எல்லைகள் இல்லா இலக்கிய வாழ்வின்
ஏந்தல்கள் அவரைப் போற்றுவதும்; ’அவர்
சொல்லில் பிறக்கும் சிந்தனைகள் தமிழ்ச்
சுவைஅமுதம்என ஏற்றுவதும்; நம்
இல்லற தருமம் என்றிருப் போமதை
இனிதே எவர்க்கும் எடுத் துரைப்போம்!

நன்றிதன் வழியில் நடந் திங்கு;நல்
நட்பின் மையம்  என்றி ருந்து;தமிழ்க்
குன்றின் மீதொரு விளக்காக; சுடர்
கொண்டு விளங்கிடும்  பாவலரே;புகழ்
வென்று,வாழ்விதில் சாதனை கள்
விளைந்திடக் கண்டு, பல் லாண்டு;
நின்று நற்றமிழ்ப் பெருமை எலாம்
நிதம் நாட்டிடத் தான் வாழ்த்து வனே!
இவண்-
கிருஷ்ணன்பாலா
7.12.2012

குறிப்பு:
முகநூலாளர் பாவலர் இராஜ தியாக ராஜன் அவர்களின் தமிழ்த் தொண்டு குறித்து வாழ்த்திய கவி மடல் இது.

No comments: