பாரதி தோன்றிய நாள்!
----------------------------------------
இந்தியர் நெஞ்சில் எல்லாம்
----------------------------------------
இந்தியர் நெஞ்சில் எல்லாம்
இமயமாய்த் தமிழை ஏற்றி
சுந்தரக் கவிதை செய்து
சுதந்திர முழக்கம் செய்த
மந்திரக் கவிஞன்;எங்கள்
மாகவி பாரதி;உலகில்
வந்தநாள், இன்று அவனை
வணங்குவோம்:அவன் பேர் வாழ்க!
பாரதி போற்றி!பாரதி போற்றி!
பொய்யும் புளுகும் புனைந்தது உலகு
புரட்டும் திருட்டும் கலந்தது உறவு;
வையம் முழுவதும் தேடியலைந்தும்;
வாழ்வில் நேர்மை உள்ளோர் குறைவு!
கவிஞன் என்றால் பாரதிமட்டும்
கருத்தில் நிற்கக் காணு கின்றோம்;
புவியில் அவன்போல் வாழும் நெறியைப்
பூட்டிக் கொண்டு பேணு கின்றோம்!
செவியில் அறைந்ததைப்போல் சொன்ன
சிந்தனை யாவும் கொண்டிடு வோம்;
அவையில் ஒன்று;மறைவில் ஒன்று
அறியார் நாமெனக் கண்டிடு வோம்!
பாரதி தன்னைப் படித்தோர்;நமது
பாரில் பைந் தமிழ்ச் சொந்தம்;
வாரீர்,அந்தப் பாரதி உணர்வை
வணங்கிடு வோமே என்றும்!
இவண்-
கிருஷ்ணன் பாலா
11.12.2010
1 comment:
கவிஞன் என்றால் பாரதிமட்டும்
கருத்தில் நிற்கக் காணு கின்றோம்;
புவியில் அவன்போல் வாழும் நெறியைப்
பூட்டிக் கொண்டு பேணு கின்றோம்!
நல்ல கருத்துடைக் கவிதை பாரதி பற்றிய இரு கவிகளும் வாழ்த்துகள் சகோதரரே!....
Post a Comment