Thursday, December 16, 2010

எனது கருவூலத்திலிருந்து (பகுதி-I)




புள்ளி விஷயம்!
உண்மையில்-
சிறு புள்ளி;

ஊருக்குப் பெரும்புள்ளி;

உரசிப் பார்த்தால்-
கரும்புள்ளி!
         
அளவுகோல்!
ஒரு புள்ளி
கோலமும் ஆகலாம்;
அலங்கோலமும் ஆகலாம்!
அது
போடுகின்ற புள்ளியைப்
பொறுத்த விஷயம்
       

உயில்!
என் எழுத்தைப்
பொன் எழுத்தாய்ப்
பொறித்து வைப்பேன்:

போற்றுவதும் தூற்றுவதும்
உங்கள் தலை எழுத்து!

உங்கள் கவனத்துக்கு!
‘எழுங்கள் மேலே’

‘எழுங்கள்’என்பது
உங்கள் இடத்தைக்
காலி செய்வதற்கன்று;

உங்கள்
இதயத்தை
நிரப்பிக் கொள்வதற்கு!       

ஜனனம்
எரிப்பதற்காகச்
சுடரை
ஏந்திக் கொண்டிருந்தேன்;

பிறகுதான் தெரிந்தது:

இருளின்
மரணத்தில்தான்
ஒளியின் ஜனனம்
என்பது!
         

கடவுளுக்கு நன்றி!
கடவுள்
எவ்வளவு
கருணை மிகுந்தவன்?

’கையில்
’காசு இல்லையே’
என்று கலங்கி அலைந்தேன்:

இதோ-

என்முன்
கையே இல்லாத
ஒருவன்!

ஓ…!
கடவுள்
எவ்வளவு
கருணை மிகுந்தவன்?
         

ஒரு பூமாலை
புலம்புகிறது!

”மந்தி
மந்திரியானாலும்;

மந்திரி
மந்தியானாலும்;

நஷ்டம் என்னவோ
எனக்கே எனக்கு”      

மழையோ மழை!
“மந்திரீ,
மாதம் மும்மாரி
பொழிகிறதா?

என்று கேட்ட
முடியாட்சி போய்-

மந்திரிகளே
குடி’யாட்சி செய்யும்

எங்கள் காலத்தில்
மாதம் மும் மாரி என்ன/

நித்தமும்
நல்ல மழைதான்
மந்திரிகளின் காட்டில்
         

உள்ளே தள்ளு!
சம்பள உயர்வில்
ஐம்பது கேட்டு-

கேஷியர்,குமாஸ்தா,
டைப்பிஸ்ட் தீபா,
டெலிபோன் ரேகா
அட்டெண்டர்கள்
ஆறு பேர்கள்;
அறைக்கு வெளியே!

ஏ.ஸி.க்குள்ளே
இருக்கும் எம்.டி
எரிந்து விழுந்தார்;
‘பசங்களையெல்லாம்
வெளியே தள்ளு’

பி.ஏ. கையைப்
பிசைந்து குழைந்தார்;

“பெண்களை…?.”

முனகினார் எம்.டி;
“முட்டாள்.
என் அறையில் தள்ளு”      
 
நல்ல வழிகாட்டி!
”எச்சரிக்கை!
உங்கள் பாதை
வளந்து வளைந்து செல்கிறது;
நேராய்ச் சென்று பலியாகாதீர்!”

வாழ்வில்-
நேராய்ச்
செல்ல நினைப்போர்க்கெல்லாம்-

பின்னல் வருவதை முன்னால்
உரைக்கும்

’ஹைவேஸ் போர்டு’
நல்ல கெய்டு!’
          

சுய தரிசனம்!
நான்
கவிதைகளைப்
படைத்து விட்டதாய்ப்
புளகாங்கிதம் அடைந்தேன்;

பிறகுதான் தெரிந்தது;
அப்படி
நான்
புளகாங்கிதம் அடைவதற்கு
‘உங்களிடையே
என்னைப் படைத்ததே
அதுதான்’
என்பது!.


அனுபவத்தின் வழியே!
அன்று-

பரபரப்பும் பகட்டும்
நிறைந்த
இந்தத் தெருக்களின் வழியே
திரிந்து கொண்டிருந்தேன்….
உலகம் அறியாதவனாக!



இன்றும்-

இதே தெருக்களின் வழியே….
அமைதியாக
நடந்து கொண்டிருக்கின்றேன்….

உலகம்
என்னைஅறியாமல்!

கவனம்…கவனம்….
எனது தோட்டத்தில்
வேம்புகளை வளர்த்தது
உங்களுக்கு
மருந்தாகத்தான்!

சரி…!
இதோ-
கரும்பைப் பயிரிடுகின்றேன்;

கவனம்
இருக்கட்டும்!

காமனின்
கைக்குப்
போய் விடப் போகிறது!


என்னைத் தெரியுமா?
கனவுகளில்
மூழ்கிப் போய்-

நீங்கள் எல்லாம்

காதல் சாம்ராஜ்யத்தின்
மன்மத ராஜனுக்குக்
கப்பம் செலுத்துகின்ற
சிற்றரசர்கள்தான்;

என்னிடம்
கவிதை எனும்
காண்டீபம்
இருக்கிறது!

அவன்,
எனக்குக் கரும்பு வில்லால்
கட்டளையிட முடியாது!


நெருங்கி வரும்போது...
பெண்ணே!

நான்
உன்னைப் பார்ப்பதாய்க்
கர்வம் கொள்ளாதே!

உன் விழிகளுக்குள்
நீ
பிடித்து வைத்திருக்கும்
என்னைத்தான்
பார்க்கின்றேன்;

சந்தேகம் இருந்தால்
நெருங்கிப் பார்!
எனது விழிகளுக்குள்
இருக்கும்
உனது
விழிகளுக்குள்ளும்
நான்தான்!


இதயத்தில் அடித்த ஆணிகள்!
குடியிருப்பதற்காக
வீடு தந்தால்-

சுவர்களில்
இத்தனை
ஆணிகளையா
அடித்‘து வை’ப்பது?

எத்தனை
ஆழமாகப் பதிந்து விட்டன?

இதயம்
எப்படி வலிக்கிறது தெரியுமா?

அடீ,கள்ளீ,
இது
உனக்கு நியாயமா?

         
அது மட்டும் எப்படி?
அன்பே,
சிலரது கண் பட்டால்
எதுவும்
பட்டுப் போய் விடுமாமே?

ஆனால்-
உன் கண்பட்ட மாத்திரத்தில்
பாலைவனமாய்ப்
பட்டுப் போயிருந்த
எனது
இதயத்தில் பசுமைகள்
துளிர்த்தது எப்படி?
    

மீனே…மீனே!
கண்ணே,
நான்
வெறும் வலைகளைத்தானே
வீசினேன்….?

நீ,
அதில் சிக்கி
ஏன்,.
கவலைகளாய்
அதை
மாற்றிவிட்டாய்?

          
அவளுக்காக... 
கல்யாணமான கவிஞன்
காதலிக்காக
கவிதைகள் படைத்தான்;

படித்த நண்பன்
பரிகசித்தான்:

“அற்புதம் கவிதை;
ஆயினும்-
உன்னரும் மனைவி
படித்தாளாயின்
உதைதான் கிடைக்கும்;
கவனம்;கவனம்…”

கவிஞன்
அதற்குக் கணக்காய்ச் சொன்னான்:

“ஒத்தடம் பெறத்தான்
இதைப் படைத்துள்ளேன்”

கனவுமலர்கள் பூக்க!
உங்கள்
தோட்டத்தில் பூக்கின்ற
கனவு மலர்களுக்காக
நான்
தூவும் விதை
’க’விதை’

-கிருஷ்ணன் பாலா
16.12.2010 

v   இந்தப் படைப்புக்களில் பல 1987களில் எனது “இந்த ராஜபாட்டையில்….” என்ற கவிதை
      நூலில் கோர்க்கப் பட்டவை;சில புதிய சிந்தனைகளில் வடிக்கப் பட்டவை. (ஆ-ர்)

No comments: