Saturday, December 24, 2011

ஊடல் இன்பம்!









அருமை நண்பர்களே,
கவிதை இலக்கிய ஆர்வலர்களே,

காதற்சுவை ததும்பும் கவிதைகளைப் படைப்பதில் அளப்பறிய
ஆர்வம் கொண்ட கவிஞர்களே,

முகநூலில் தொடர்ந்து எனது பதிவுகளைப்
படித்து வரும் எனது நண்பர்கள் பலரும் 
அறிந்திருக்கும் உண்மை: ‘நான் காதல்சினிமா,காமெடி வகையிலான கருத்துக்களை எழுதுவதிலோ  அவை பற்றிய விமர்சனங்களில்
பங்கு பெறுவதிலோ ஆர்வம் காட்டாதவன்அவற்றைக் கடுமையாக
விமர்சிப்பவன்’ என்பது.

சில நண்பர்களுக்கு இதில் சற்று விசனம்கூட வந்ததுண்டு,
இன்னும் சிலர்  ‘ஏன் ஸார்,உங்களுக்கு காதல் என்றாலே பிடிக்காதோ
என்று கேட்டுக்கூட எழுதியதுண்டு.

 நானும் கூட –
  “காமெடி,சினிமா,காதல் பித்து,
  கவிதை எனும் பெயரில்
  யாம்இன்புற்று எழுதுவ தில்லை;
  என்னை மன் னிப்பீர்!’’

என்று
இதே முக நூலில் எழுதி இருக்கின்றேன்.

ஆம்.
நான் இங்கு  ‘காதல் கவிதைகள்’ என்னும் பெயரில் ‘குப்பை
கொட்டுவதை’ எதிர்ப்பவன்;விரும்பாதவன்தான்.

ஆனால் உண்மையில்-

எனக்கும் காதல் உண்டுஅது இலக்கியம் தழுவிய எண்ணங்களில்
மூழ்கிஇன்புற்று மகிழ்ந்த காதல்பண்பினாலும் அறிவார்ந்த
அன்பினாலும் அந்தக் காதலுக்கு சமாதி கட்டிய ஷாஜகான் நான்.

அத்தகைய காதலுக்குச் சமாதி  கட்டியதன் மூலம் அதன் 
நினைவுகள் அமரத் தன்மை பெற்றிருப்பதாய்ப் பெருமை
கொண்டுஇதோ-
எனது ஊரின் அமராவதி நதியின் நினைவுகளில் மூழ்கிஉங்களுக்குக்
காதல் இலக்கியக் கவிதை ஒன்றை யாத்திருக்கின்றேன்.

இந்த இணையக் காதல் எங்கே?
அந்த இணையற்ற காதல் எங்கே?

நாயகி ஊடலின் முடிவில் கூடி முயங்கும் காதல் இன்பத்தின் நுகர்ச்சியை வெளிப்படுத்தும் கவிதை இது.

வள்ளுவன் வடித்த காமத்துப்பாலின் ‘ஊடல்உவகை அதிகாரத்தின்
இறுதிக் குறளின் இலக்கண விளக்கம்போன்ற இந்தக் கவிதையில் 
இன்புறுங்கள்.

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா-
24.12.2011




ஊடல் இன்பம்!
---------------------------
அன்றொரு நாள்மார் கழியின்
       அழகான பவுர்ணமி நாள்;
நின்றிருந் தேன்,அமரநதி
       நீள்கரை யின்வய லோரம்;
கன்றிளமை வய தோடும்
       காதலியின் நினை வோடும்
மென்றுவரும் நினை வலைகள்
       மேவி வரக் காணுகின்றேன்:

வானமெனும் வீதியதில்
       வட்டமிடும் வெண் ணிலவு;
மோன நிலை நான டைந்து   
       மூழ்கியதில் எனை மறந்தேன்;
பூனையென நடந்து வந்து;
       பூவிழியாள் தீண்டி விட்டு,
ஏனென்று கேட்ட துபோல்
       இடம் பெயர்ந்து நின்றிருந்தாள்!

’’ஆகா,என்ஆ ருயிரே
      ஆனந் தத்தே னமுதே;
வாகான வளர் கவிதை
      வழங்கு கின்ற அட்சயமே!
ஏகாந்த வேளை யிதில்
      ஏன் விலகி நிற் கின்றாய்?
நோகாமல் நோக வைக்க
      நோக்கா மல்நிற் குதியோ?”

என்றவ ளைஏறெ டுத்தேன்:
      இரக்கமின்றி அவளு ரைத்தாள்:
இன்றுநான்  வரும் போது 
      என் நினப்பு இல்லாமல் 
நன்றென்று வெண் ணிலவில்
      நாட்டம்தான் கொண் டிருந்தீர்?
பின்னெ தற்குநா னிங்கு?
      பேசா மல்போ கின்றேன்!”

அய்யய் யோ,கண் மணியே,
       அநியா யம்உன் கோபம்;
பொய்யன் றுஎன் காதல்;
      புரியா தோஎன் மனது?
மெய்யா கச்சொல் லுகிறேன்
      மேகத்தில் உன் முகந்தான்
கொய்துவைத்த நிலவாக
      கொள்ளை யிடக் கண் டேண்டி’”

உன்னழகை எண்ணித் தான்
      உள்ளம் பறிகொடுத் திருந்தேன்;
என்றென்  றும்எப்  போதும்
      எங்கேயும் உன் நினை வில்
பின்னுகின்ற உவமை களில்
      பேசுவ தில்உரு கும்நீ
என்கவிதைப் பாடுபொருள்;
       இலக் கணமும் நீதானே!

முந்நாளில் நாம் இருவர்
      மோகத்தில் திளைத் திருந்த
அந்நாளை மறந் தனையோ?
      அப்போதும் இந்  நிலவே
ஆகாயச் சாட்சி யன்றோ?
       இப்போது மட்டும் அதை
எதிரியெனக் காண்கு வையோ?
       முந்தாமல் முந்தி அன்று
மூழ்க வைத்த கூடலில்நீ--

முத்து நகையாடி யதும் 
       மோகமொழி வேக மதில் 
தத்தை என மாறி யதும்
       தஞ்சமெனத் தாவி எனைக்
கொத்தி விளையாடி யதும் 
       கொவ்வை யிதழோர மதில்
வித்தைபல கூறி யதும்     
   வெண்ணிலவின் சாட்சியடி!

இவ்வாறு எடுத்து ரைக்க
     இடைதளர்ந்து  எனை நோக்கி;
கவ்வாமல் கவ்வு கின்றாள்;
      காதலன்நான் மெய் யளக்க;
தவ்வாமல்தவ்வு கின்றாள்;
      தையலவள் மையல் உற
செவ்வாயில் முத்துரைத் தேன்;
      சேயிழையோ சொத்தி ழந்தாள்!


--------------------------------------------------------------------------------------------
“ஊடுதல் காமத்திற் கின்பம்; அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்”
 (திருக்குறள்: காமத்துப் பால்:அதிகாரம்:ஊடல் உவகை - குறள்:1330)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: