மேகவண்ணன் பரந்தாமன்
கண்ணை மூடிக் கொண்டபோதும்
காட்சி தெரிகின்றது: இந்த
மண்ணை மறந்து துயிலும்போதும்
மனது விரிகின்றது!
’கனவில் வாழும் உலகம்’ என்றே
மனது மகிழ்கின்ரது;அந்த
மனதைத் தேடும் எந்தன் கனவு
மண்ணில் விடிகின்றது!
’கனவில் வாழும் உலகம்’ என்றே
மனது கெடுகின்றது; அந்த
மனதைத் தேடும் எந்தன் கனவு
மண்ணில் விடிகின்றது!
நெஞ்சில் வாளைச் சொருகும் உறவில்
நேசம் மடிகின்றது;அதன்
வஞ்ச நிழலில் வாழ்ந்த வாழ்வின்
வாட்டம் சுடுகிறது!
உலகில் முன்னே உள்ளவன் போலே
ஒளித்து நடிக்கின்றேன்; நீ
தொலைவில் நின்று சிரித்தபோது
துடித்து வெடிக்கின்றேன்!.
உன்னை முழுதும் என்னுள் அழைத்தேன்
ஓடி வருவாயா;கண்ணா
என்னைத் தேற்றி, புண்ணை ஆற்றும்
இரக்கம் தருவாயா?
என்னை இங்கு எதற்குப் படைத்தாய்?
என்று கேட்கின்றது; மனம்
உன்னைப் பகையாய் எண்ணிக் கொண்டென்
உயிரில் கலக்கின்றது!
இந்தப் பயணம் எதுவரை, என்று
எனக்குச் சொல்வாயா?;மனம்
கந்தல்ஆகிக் கலங்கி நிற்கும்
கணக்குத் தீர்ப்பாயா?
கனவைப் போலே வாழ்வு படைத்தாய்;
கவிதை படைக்கின்றேன்;அதில்
கனவை நானும் விரித்து வைத்து
கவலைப் படுகின்றேன்!
வந்த விதமே திரும்பிச் செல்லும்
வரத்தைக் கேட்கின்றேன்;அந்த
வரத்தில் எந்தன் பாரம் தீரும்
விதத்தைப் பார்க்கின்றேன்!
கிருஷ்ணன் பாலா
3.9.2010
|
Thursday, December 8, 2011
வரந்தாராய், பரந்தாமா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment