Monday, December 12, 2011

தமிழருக்கு விண்ணப்பம்!

உலகத் தமிழர்களே ஒன்று சேருங்கள்;
ஒன்று சேரும் காலமிதை நன்று தேருங்கள்;
கலகச் சிறுமையெல்லாம் வென்று கூடுங்கள்;
கனிந்தநமது உயர்நெறியில் நின்று வாழுங்கள்!


மனிதநாக ரீகத்துக்கே மூத்த தமிழ்இனம்;
மற்றவர்க்கு அடிமையாக ஆனதித் தினம்;
தனியரசில் ஓங்கியுரிமை காத்த நமதினம்;
தனித்துவத்தை மீண்டும்மண்ணில் கொள்வ தெத்தினம்?


அறிவியலும்,பொறியியலும் கற்றுத் தேறுங்கள்;
அகிலமெல்லாம் சென்றுபொருள் சேர்த்து வாருங்கள்;
திறமையான பேர்களுக்கே தலைமை காணுங்கள்;
தேசம்இதன் பெருமைகாக்க உறுதி பூணுங்கள்!


தமிழர் எங்கு துயர்படினும் தடுக்க ஓடுங்கள்;
'தமிழர்இனம் வாழ்க' எனும்சிந்து பாடுங்கள்!
அமிழ்தினிய தமிழ்மொழியின் சுவையை நாடுங்கள்;
அடுத்த மொழியில் சிறந்த போதும் தமிழைப் பேசுங்கள்!


தெய்வத் தமிழ்க் கவிதைகளைத் திளைத்து அள்ளுங்கள்;
தினம்அவற்றைப் பாடிப்பாடிப் பக்தி கொள்ளுங்கள்!
ஐயமின்றித் திருக்குறளைத் தெளிந்து சொல்லுங்கள்;
ஆத்திச்சூடி அவ்வை சொன்னாள்;அதிலும் நில்லுங்கள்!


கண்ணகியின் காவியத்தைக் கருதிப் போற்றுங்கள்;
கம்பனோடு பாரதியைக் கருத்தில் ஏற்றுங்கள்;
அண்ணல்ராம லிங்கவள்ளல் பாதை சாற்றுங்கள்;
ஆன்மநேய ஒருமைப் பாட்டுச் செயலை ஆற்றுங்கள்!


பெற்றெடுத்த பிள்ளைகட்குத் தமிழை ஊட்டுங்கள்;
பேணுகின்ற முறையில் தமிழ்மரபை நாட்டுங்கள்;
சுற்றியுள்ள அன்னியர்பால் அன்பைக் கூட்டுங்கள்;
'சொந்தம்' மட்டும் இந்தமண்ணில்' என்று நாட்டுங்கள்!


பிறந்த மண்ணை மறந்திடாது என்றும் நினையுங்கள்;
பேசுகின்ற கருத்தில் மொழி உணர்வை நனையுங்கள்!
சிறந்தநேசம் காட்டி வாழும்மண்ணில் உழையுங்கள்;
'செல்வமெல்லாம் தமிழைக் காக்க' என்று விழையுங்கள்!


உலகமெல்லாம் நீங்கள் பரவி, விரிந்து வாழினும்,
'உயிர் உடைமை' என்றுதமிழ் மண்ணை எண்ணுங்கள்;
பலவிதமும் வாழ்க்கை வசதி உம்மைச் சூழினும்,
பாரதத்தின் தென்னிலத்தைப் பார்வை கொள்ளுங்கள்!


'பெற்றநாட்டின் பெருமைஒன்றே பெரிது' என்பதாய்ப்
பேசிப் பேசிக் குழியில் வீழும் பழியில் மீளுங்கள்!
மற்ற நாட்டு மைந்தர்களின் சிறப்பு யாவையும்;
மனம்திறந்து பேசுகின்ற பண்பை ஆளுங்கள்!


'தமிழர்' என்றால் 'தரம் மிகுந்த மக்கள்' என்பதை;
தகுதியோடு நிலைநிறுத்தப் போட்டி போடுங்கள்;
அமைதியான அறிவுமிக்க தமிழர்நாம்' என'
அகிலமெல்லாம் உணர்த்துகின்ற வாழ்வு சூடுங்கள்!


-கிருஷ்ணன் பாலா-


(‘வாழும் தமிழ் உலகம்’என்ற மாத இதழில்1984-ல்பிரசுரமான கவிதை மடல் இது)

No comments: