பரம் பொருள் கண்ணன்;பரந்தாமன்;என்
பரம நினைவில் எழும் தந்தை;
கரம் தொழுகின்றேன் அவன் முன்னே;
கண்கள் பணித்தன கேள்விகளில்!
‘எந்தை உன்முன் எழுதுதல் என்பது
இன்பத்துள் இன்பம் பேரின்பம்;
சிந்தையுள் சிதறும் கேள்வி எலாம்
சிறகடித்திடுவது,இதில் தானே?
கேட்கின்றேன்,என் பரந்தாமா;நீ
கீதையைக் காட்டிச் சிரிக்காதே!
வாட்டம் நீக்குவ தல்லாது;
வஞ்சனை நாடகம் நடத்தாதே!
எண்ணம் யாவும் உன்னடி வைத்து
எழுத்தில் உனையே அணிகின்றேன்;
‘பண்ணும் செயலில் புண்ணியம் சேரப்
பண்ணும்’என்றே பணிகின்றேன்!
‘நன்றாய் என்னை ஆக்கிடத்தானே,
நன்மையும் தீமையும் வகுக்கின்றாய்?’
என்றே எண்ணி இயங்கும் என்னுள்
எத்தனை மாற்றம் கொடுக்கின்றாய்?
உன்முன் எழுத்தில் பணியும் என்றன்
உளமே புகுந்து நிறைவோனே;
என்முன் தோன்றும் காட்சிகள் தோறும்
இருந்தே விரிந்து மறைவோனே!
”ஜனனம் என்பது உயிரின்
நுகர்வு;
ஜனித்த
பின்னால்தான் காணும் உறவு:
மரணம் வரையினில்
தொடரும் உலகு;
மரித்த பின்னாலோ
அனைத்தும் கனவு!
எண்ணிப்
பார்த்தேன்,இறைவா ”என்னுள்
எத்தனை ஜனனம்;எத்தனை
மரணம்?”
மண்ணில்,‘நான்’,‘நீ’, ‘எனதுன’தென்னும்
மாயை எதற்கு?
விடை சொல்வாயா?
மாயை இதுவென
அறியும் மனதுள்
மயங்கும் மதியைப்
படைத்தவன் நீயே;
சேயைப்
போல்நான்,தேம்பிடும்பொழுது
சேய் போல்
சிரித்து மழுப்புகின்றாயே?
என்
விருப்பத்தில் நான்வர வில்லை;
இங்கென்
விருப்பம் நீதடுக் கின்றாய்;
உன்
விருப்பத்தில் பிறந்தவன் தன்னை
உலகியல்தனில்
ஏன்புதைக் கின்றாய்?
பொருள்வழி உலகில்
பிறந்தேன்;இங்கே
பொருளை,அருள்வழி
இறைக் கின்றேன்;
அருள் வழி
பொருளா? பொருள் வழி அருளா?
அதை நான்
புரிந்திடத் துடிக்கின்றேன்!
பொருள்வழி
மட்டும் வாழ்வென்றிருந்தோர்
போன பாதையைப்
பார்க்கின்றேன்;
அருள் வழி
நின்றோர் அருளிய பொருள்வழி
அடைந்திடும்
பொருளைச் சேர்க்கின்றேன்!
உயிர்வழிப் பயணம்
உணர்ந்திடும் அறிவில்
உண்மையும்
ஒளியும் தடுமாற்றம்;
பயன் தரும் பயணம்
எனப் புகுந்தால்
பாதையில் எத்தனை
ஏமாற்றம்?
பொய்யை
மெய்யாய்ப் பேசியவாறே
பொழுதைக்
கழிக்கும் புல்லருடன்;
வையம் வாழ்ந்திட
வருந்துகின்றேன்;
வருந்திடத்தானா
வாழ்வ ளித்தாய்?
பொய்யைச்
சுடுமோர் பொல்லாச் சினமும்
புல்லரின்
உறவைஅறுத்திடும் மனமும்
மெய்காண்பதற்குத்
துடித்திடும் குணமும்
மேன்மை
இலையேல்,ஏன்இவ் வாழ்க்கை?
தர்மா,தர்மம் தலை
குனிந்திருக்க
தத்துவப் பொய்கள்
தலை நிமிர;
‘கர்மா’என்றே இதைச் சொல்லிக்
கைதொழுதற்கா
எனைப் படைத்தாய்?
குறிப்பு:
1996களில் இச் சிந்தனை எழுந்து கவிதை எனத் திரண்டது.
இப்போது இங்கே பதிவில் 17.9.2010-
1 comment:
கர்மம் என்பது ஜனனம் என்றும்
புண்ணியம் மட்டும் நான் என்ற
மாயனிடம் வினவும்"மெய்யனின்" அனைத்து கேள்விகளும் நியாயம்!
Post a Comment