Friday, October 14, 2011

விருந்தும் மருந்தும்!


கோணல்மதி கொண்டுலகில்
       குறுக்குவழி தேடிடுவோர்;
                 கூட்டதிடை மாட்டிக் கொண்ட மனது;
                கூறுகிறேன் உண்மை; அது எனது!

பூணுவது புலி வேஷம்;
       பொங்குவது ஆவேஷம்;
            புரிந்து கொள்ளும் அறிவுடையோர் கணக்கு;
            போடுகிறேன்;அதிகமில்லை எனக்கு!

நாணலதைப் போல் மனதை
         நான் வளைத்துக் கொள்வதில்லை;
                நச்சுமனப் பேர்வழிகள் கூட்டம்;
                நான் நிமிர எழுதுவதால் வாட்டம்!

மாணவனைப் போலிருந்து
        மற்றவர்க்குக் கற்றுத் தரும்
                 மடமையதில் உழலுகின்ற ஆளை;
                 மண்டியிட வைப்பதுஎன் வேலை!

வள்ளுவனும் பாரதியும்
       வார்த்தெடுத்த வார்த்தைகளைக்
                  உள்ளமிதில் விதைத்தவனின் எழுத்து;
                 உலகளவில் சொல்லுகின்ற கருத்து!

உள்ளபடி சொல்லுகின்றேன்;
        உண்மையைத்தான் வெல்லுகிறேன்!
                 ஊக்கமுடன் சொல்லுவதைக் கேளீர்;
                      உணர்பவர்கள்தாம் எனக்குக் கேளிர்!

தெள்ளுதமிழ்ப் பண்புகளை
       தெளிவாக எடுத்துரைக்கத்
                 தீந்தமிழின் வார்ப்புக்களைத் தேடி;நான்
                           தீட்டியது ஞானம் ஒரு கோடி!

கள்ள மனம் பெற்றவரும்
       கயமைக் குணம் கற்றவரும்
                   கட்டாயம் என் எழுத்தைக் கண்டு
              கலங்குகின்றார் கவலைகளில் நின்று!

ஆனவரை நானவரை
       அடையாளம் கண்டு கொண்டு
                   அவர்திருந்த நான் எழுதும் பாட்டை;
             ஆணவம்போல் சொல்பவர்கள் ஓட்டை!

மானுடன்நான் என்றாலும்
         மற்றவர்போல் இல்லாமல்
                   மானமிகும் நெஞ்சுரத்தால் நின்று;பொய்
                      மாய்ந்திருக்க எழுதுகிறேன் இன்று!

மானமின்றி நாணமின்றி
         மாக்களென வாழுகின்றோர்
                    மனந் திருந்த வேண்டுமெனும் நோக்கம்;அது
                    மாகவிஞன் பாரதியின் தாக்கம்!


பூனைகளும் யானைகளும்
       புரிந்து கொண்டால் என் எழுத்து
                  புதுப் படையல்போல் விளங்கும் விருந்து;
                     புல்லருக்கோ வாய்கசக்கும் மருந்து!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.10.2011

No comments: