அன்பிற் குரிய நண்பர்கள்: நல்ல
அறிவு செழித்த வாசகர்; மற்றும்
என்னை அறியா நண்பர் யாவரும்
இங்கென் கருத்தை அறிவ தாகுக!:
எழுத்து என்பதைப் புனிதத்தோடு
எழுதும் எண்ணம் கொண்டவ ரிடையே
அழுத்தம் கொண்டு நிற்பவன் நான்;என்
அகத்தில், எழுத்தில் பொய் இல்லாதவன்!
எதை ’நான்’ ’எனது’ இலட்சியம் என்று
எடுத்துச் சபையில் ஓதுகின்றேனோ;
அதையென் வாழ்வில் நடைமுறையாக்கி
அகச்சான் றோடு வாழு கின்றவன்!.
’நான்’ ‘நான்’ என்று எழுதி வருவதை
’நன்றாய் இல்லை’ என்று, சிலபேர்
தான்சொல்கின்றார்: அவரிதை அறிக:
‘தமிழின் எழுத்துக் கர்வம் அது’தான்!
சின்னஞ் சிறிய வயது முதலே
செழுந் தமிழ்எனது சிந்தை புகுந்தது;
தன்னந் தனியே வளர்ந்தேன்;எனக்குத்
தமிழைத் தந்தனள்;அன்னை வாணி!
அவளே எனக்குக் குருவாய்,அறிவாய்
அனைத்தும் ஆனவள்;என் குருநாதன்
தவப் பொருள் யாதென உணர்த்தினன்:
‘தரமாய் எழுதும் தனித் திறன்’ அதுதான்!
பழம்புத் தகங்கள்; ‘பார்பர்’ கடைகளில்
படித்திடும் இதழ்கள்; பழியில்லாதோர்
தொழும்நூ லகங்கள் துணையாய் இருக்கத்
தொடர்ந்து பயின்றேன்;தொடுவதும் இதுதான்!
இளமைக் காலம் வறுமையில் இருந்தது:
இனிவரும் காலம் அறிவினில் இருப்பது:
வளமை என்பது பணத்தினில் இல்லை;
வளையா நெறிமுறை தான்நல் வாழ்க்கை!
கற்றதன் வழியில் நிற்கும் முயற்சி;
கசடற வாழ எடுக்கும் பயிற்சி:
அற்றது நீக்கி உற்றது நோக்கி
அடிவைப் பவன்நான்; அறிவோர் அறிக!
என்எழுத் தைத்தான் எழுதி வைக்கிறேன்;
எடுப்போர்;புரிவோர் படித்து மகிழ்க!:
பொன்னெழுத் திதுவெனச் சொன்னா லதனைப்
புழுங்கிக் கொள்வோர்;விலகிக் கொள்க!
எவர்பொருட் டும்என் எழுத்துக்க ளில்லை;
எவருக்கும் எதிராய் எழுதுவ தில்லை!;
தவறுகள் கண்டால் பொறுப்பது இல்லை!
தமிழ்அறி யாதோர் என்சபை இல்லை!
இளம்சமு தாயம் எதிர் காலத்தில்
இருந்திடும் முறைமை யாதெனக் கருதி
உளம்உணர் வோடு எழுதுகின்றேன் நான்;
உற்றவர்,பெற்றவர் படித்துக் கொள்வர்!
கற்றவர் யாரும் கருத்துரைத் திடவும்
கல்லா மாந்தர் கற்றுக் கொள்ளவும்;
மற்றவர் எல்லாம் மௌனம் காக்கவும்
மனம்திறந் துரைத்தேன்;யாவரும் அறிக!
நட்புடன் –
கிருஷ்ணன்பாலா
30.9.2011
No comments:
Post a Comment